Sunday, May 8, 2016

அன்ன பூரணி பிச்சையிட்ட தினமான அள்ளித் தரும் அட்சய திரிதியை!




க்ஷயம் (அட்சயம்) என்றால் அ + க்ஷயம். க்ஷயம் என்றால் தேய்தல் அல்லது குறைதல் என்று பொருள். குறைவற்ற வாழ்வை அட்சயம் என்கிறார்கள். குறையில்லா மனது ஏது? இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்வதே அட்சயம். இந்த எண்ணம் பெருக அருள் செய்யும் நாள் அட்சயதிரிதியை. சித்திரை மாதம் வளர்பிறை திரிதியையில் வரும் புண்ணியத் திருநாள் இது.
பிரளயம் முடிந்ததும் வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை சிவப் பரம்பொருள் உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க அருள்செய்த திருநாள் இது. சூரியனிடமிருந்து பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது இந்நாளில்தான்.

பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், உச்சைஸ்ரவஸ், ஐராவதம், கல்பதரு, காம தேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை. அவள் ஐஸ்வரிய லட்சுமியாகவும், தானிய லட்சுமியாகவும் தோன்றியதும், அவள் மாலவனின் மார்பில் இடம்பெற்றதும் அட்சய திரிதியை நன்னாளில்தான். 

பாற்கடலைக் கடையும்போது மேலே வந்தவள் திருமகள்; திருமாலுக்குச் சொந்தமானாள்.  அதேபோல், தயிரைக் கடையும்போது மேலே எழும் வெண்ணெயும்  கண்ணனுக்கு உரியதாகிவிட்டது! 
வெண்ணெயும், கல் உப்பும் மகா லட்சுமி உறையும் பொருட்கள். அட்சய திரிதியையில் இந்த இரண்டையும் வாங்குவது விசேஷம்.

குபேரன் லட்சுமியை பூஜித்து செல்வங் களைப் பெற்றார் என்கிறது லட்சுமி தந்திரம். எனவே, அட்சயதிரிதியையில் குபேர லட்சுமி பூஜை செய்வது சிறப்பு. அதேபோல் குபேரன் தவமிருந்து சிவனாரிடம் சங்க நிதி குபேர நிதி பெற்றதும் இந்த நாளில்தான்.

பரசுராமன் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.

வேதவியாசர் விஷ்ணுவின் அம்சம் (வ்யாஸாய விஷ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஷ்ணவே! நமோவை ப்ரம்ம நிதயே வாஸிஷ்டாய நமோ நமஹ எனப் பிரார்த்திக் கிறது விஷ்ணு சகஸ்ரநாமம்). வருங் காலத்தில் வேதத்தை அனைவராலும் படிக்கவோ, அதன் வழி நடக்கவோ இயலாது என்பதால், வேதத்தின் சாரத்தை மகாபாரத வடிவில் கிரந்தமாக்க நினைத்தார் வியாசர். 

அதனாலேயே பாரதம் பஞ்சமோ வேதஹ - பாரதம் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. வேதவியாசர் பாரதம் எழுத விநாயகனைத் தொழுதார். அவரும் ஒப்புக்கொண்டார். நிறுத்தாமல் எழுதும்படி சொல்லவேண்டும் என்பது கணபதியின் நிபந்தனை. அதேபோல் பொருள் புரியாமல் எழுதக்கூடாது என்பதும் வியாசரின் நிபந் தனை. இருவரும் ஒப்புக்கொள்ள, பாரதம் உருவானது. அப்படி ஒற்றை தந்தத்தையே எழுதுகோலாகக் கொண்டு, வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் பாரதம் எழுதியது, அட்சயதிரிதியையில்தான்.

கர்நாடக மாநிலத்தில், இந்நாளில் ஸ்வர்ண கௌரி விரதம் கடைப்பிடிக்கிறார் கள். அன்று, பார்வதிதேவி தனது பிறந்த வீட்டுக்கு வருவதாகவும், அவளுக்கு பாதுகாப்பாக விநாயகரும் உடன் 
வருவதாக ஐதீகம். அன்று சுமங்கலி பூஜை செய்து ஆடை வழங்குவது வழக்கம்.

பிரம்மனின் சிரசைக் கொய்த சிவனாரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. பிரம்ம கபாலமும் அவர் கையிலேயே ஒட்டிக்கொண்டது. தீராத பசிப்பிணிக்கும் அவர் ஆளானார். கபாலம் நிறைந்தால்தான் விமோசனம் கிடைக்கும். எனினும் அது பிரம்ம கபாலம் இல்லையா? எவ்வளவு பிக்ஷை இட்டாலும் நிறைய வில்லை. நிறைவில் அன்னபூரணி ஆண்ட வனுக்குப் பிக்ஷையிட்டாள். கபாலமும் நிறைந்தது; வயிறும் நிறைந்தது. கபாலமும் கையைவிட்டு அகன்றது. இப்படி, அன்னபூரணி பிக்ஷையிட்ட திருநாள் அட்சயதிரிதியை. எனவே, இந்த நாளில் அன்னதானம் செய்பவர்கள், வாழ்வில் அனைத்து நலன்களும் பெறுவார்கள்.

கங்கை பூலோகத்தில் முதலில் தொட்ட இடம் கங்கோத்ரி. இங்கே நதியின் வலது கரையில், கங்கைக்காக வெள்ளை பளிங்குக் கற்களால் ஆன அழகிய கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலை அட்சய திரிதியை திருநாளில் திறந்து பூஜை செய்வார்கள். தீபாவளியன்று கோயிலை மூடிவிடுவார்கள். இந்நாளில் புண்ணிய நீர் நிலைகளில் நீராடுவதால் புண்ணியம் பெருகும் என புராணங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. 

கும்பகோணத்தில் கோயில் கொண் டிருக்கும் 16 பெருமாள்களும் அன்று  கருட வாகனத்தில் புறப்பட்டு  பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள்.

கடவுளின் அனுக்கிரஹத்தைப் பெறு வதற்கு, அவனுடைய நாமத்தைச் சொல்லி    பிரார்த்திப்பதே வழி. இதற்கு உதாரணம், திரெளபதியை கண்ணன் காத்தருளிய சம்பவம். “சங்க சக்ர கதாபாணோ த்வாரகா நிலயாச்யுத! கோவிந்த புண்டரீகாக்ஷ! ரக்ஷமாம் சரணாகதம்’’ (சங்கும் சக்ரமும் ஏந்தியவனே, த்வாரகாவில் நிலையாக வசிப்பவனே, கோவிந்தா, தாமரைக் கண்களை உடைய வனே காப்பாற்று, சரணடைந்தேன் உன்னையே) இந்த ஸ்லோகத்தைக் கூறியதும் குறையில்லாமல் பெருகியது துகில். இந்த நிகழ்வு நிகழ்ந்த தினம் அட்சய திரிதியை. எனவே, இந்தப் புண்ணிய நாளில் கண்ணனின் நாமத்தை ஸ்மரணம் செய்தால் நமது இல்லத்திலும் கண்ணனின் திருவருள் பெருகும். 

புராணங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் அட்சயதிரிதியை நாளில் தானம் செய்வதையே பிரதானப்படுத்தியுள்ளன. மேலும், இந்நாளில் செய்யும் புண்ணிய காரியங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் மடங்கு பலனைத் தரும். அன்றைய தினத்தில் செய்ய வேண்டியவை - கோயிலுக்குச் செல்லுதல், புனித நீராடல், பித்ரு காரியம், இறை தியானம், நாம ஸ்மரணம், எளியவர் களுக்கு இயன்றளவு தானம் - அவ்வளவே. எனினும், லட்சுமி வாசம் செய்யும் பொருட் களை வாங்கினால், நம் இல்லத்தில் அவள் நிரந்தரமாகத் தங்குவாள், வீட்டில் செல்வம் பெருகும் என்ற எண்ணத்தில், தங்கம் முதலான ஆபரணங்கள் வாங்குவது பிரதானமாகிவிட்டது. 

ஆபரணங்கள் வாங்க இயலாது எனினும், புண்ணியத் திருநாளான அட்சய திரிதியையில் லட்சுமிகரமாக ஏதேனும் வாங்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? எனில், லட்சுமி குடியிருக்கும் பொருளான மஞ்சள், கைக் குத்தலில் வந்த முனை முறியாத பச்சரிசி, கல் உப்பு, வெண்ணெய், வெல்லம் ஆகியவற்றை வாங்கலாம்.

அதுவும்போக, உங்களின் ராசிப்படி என்னென்ன பொருட்கள் வாங்கலாம், எவற்றையெல்லாம் தானமாகத் தரலாம், எந்த தெய்வத்தை என்னென்ன துதிப் பாடல்கள் பாடி வழிபடலாம் என்பதுபோன்ற விளக்கங்கள்  அடுத்தடுத்த பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. படித்துப் பலன் பெறுங்கள்.


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

 

Northern Province Development Officer's Union Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha